மலேசிய மலாய் இலக்கிய உலகில் முக்கியமானவராக கருத்தப்படும் அ. சமாட் சய்யிது (A. Samad Said) அவர்கள் 9 ஏப்ரல் 1935-இல் மலாக்கா டுரியான் துங்காலில் பிறந்தார். இவரின் இயற்பெயர் (டத்தோ) அப்துல் சமாட் முகமது சய்யிது ஆகும். மலேசிய மலாய் இலக்கிய வரலாற்றின் மைல்கல்லாக விளங்கி வரும் அ. சமாட் சய்யிது கவிதை, நாவல், கட்டுரை, சிறுகதை, நாடகம் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. இவரின் படைப்புகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை சலின்னா(Salina), ஃபத்தேப்பூர் சிக்ரியில் தேனில்லா நிலவு(Bulan tak bermadu di Fatehpur Skri), அந்திவானம்(Langit Petang), காலைமழை(Hujan Pagi), ஏரியோரத்தில் மன உதிப்பு(Ilham di tepi tasik) மற்றும் அல்-அமீன் (நபிகள் நாயகத்தின் வரலாறு-கவிதையாக).
இவருடைய பெரும்பாலான கவிதைகள் இறைச் சார்ந்து எழுதப்பட்டிருந்தாலும் இக்காலத்துக்கும் ஒட்டியே கிளைப்பரப்புகிறது. இறையைப் பற்றி பேசும் இவரின் பெரும்பாலான கவிதைகளில் தத்துவமும் விரவிக் கிடக்கிறது. எனினும் மதம் சாராது வழியிலே இவருடைய கவிதைகளை வாசிக்க நிச்சயமாய் பொறுமையும் வேண்டும்.
இவருடைய படைப்புகளில் நான் மிக முக்கியமானதாய் கருதும் ஒரு சில கவிதைகளை மட்டும் இங்கு மொழியாக்கம் செய்துள்ளேன். இக்கவிதைகளின் மூலம் சிதைந்து விடாமல் மொழிபெயர்ப்பது எவ்வளவு கடினம் என்பது இதை மொழியாக்கம் செய்யும்போது நன்றாகவே உணர முடிந்தது. இருந்தும் மலாய் நவீன கவிதையை தமிழ்கூறு நல்லுலகுக்கு தரும் ஆர்வத்தில்…
ஒரேயொருமுறை
என் கால் நனைத்த
அந்த அலையை
இனி நான் கண்டுக்
கொள்ளயேதுவாய் இல்லை!!!
எளிமையான சொல்லாடல் என்றாலும் அதன் தத்துவார்த்தத்தை உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் திணறுவது இக்கவிதையின் பலம் எனலாம். இந்தக் கவிதையை பல்வேறு கோணத்தில் அலசலாம். ஆர்ப்பரிக்கும் கடலுக்கும் அதன் அலைக்குமுள்ள சிநேகம் கரையைத் தொடும் வரையில் என்றாலும்.. அது விட்டுச் செல்லும் அடையாளங்கள் அடுத்த அலை கரையை மீறும் வரையில்தான். அதுப்போல் அமைதியான வாழ்வுதனை தோல்விகளும் சோதனைகளும் புரட்டிப் போட்டு வேரறுத்தாலும் அன்றாட வாழ்வியல் போராட்டத்தில் அது நினைவில் நிற்பதில்லை என்ற வாழ்வின் அடிப்படை நிதர்சனத்தை மிக எளிய வரிகளில் எடுத்துரைத்திருக்கிறார் அ.சமாட் சய்யிது.
நண்பன்
அடிக்கடி கைக்குலுக்கிக்
கொண்டாலும் நாம்
ஏன் இன்னும் அறிமுகமாகவில்லை?
ஹைக்கூ வகையிலான அரசியல் நையாண்டி வகை கவிதையிது:
இடம்
யார் தொடங்கினாலும்
வலமே முடிவுற வேண்டும்!!
நூலகத்தினுள்ளே..
நூலகத்தினுள்ளே
என் கண்கள்
சொறுகி மூடியிருக்க
கண்கள் மூடி வாசிப்பதைவிட
புத்தகம் மூடி கண்கள் திறப்பது
நல்லதில்லையா?
வயோதிகரின்
குரல் சுண்டியிழுக்கிறது…
மறுநாளிலிருந்து
நான் கண்ணயர்வதேயில்லை
அந்த வயோதிகரை
பார்த்து நாளாயினும்
நூலகத்த்தினுள்ளே
இப்பொழுதெல்லாம்
நான் வாசிக்கிறேன்
கண்களோ அடிக்கடி
அந்த வயோதிகர்
தங்கிச் சென்ற இருக்கையை
நோக்கி!!!